யூடியூபர் டிடிஎஃப் வாசன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

TTF வாசனின் கார் பறிமுதல் விவகாரம்... “காரை ஒப்படைத்தால் மீண்டும் அதே குற்றத்தை செய்வார்” - நீதிபதி

PT WEB

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் சென்ற போது அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே காரை இயக்கி இருந்தார். மேலும், அதனை வீடியோவாக Twin Throttlers என்ற தனது YOUTUBE சேனலில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில், ஆயுதப்படை காவலர் மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப். வாசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மற்றும் வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியது, பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் (308) என்ற ஒரு பிரிவு பிணையில் வெளிவர முடியாத வகையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து டிடிஎஃப் வாசன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் தாயார் சுஜாதா, காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனு கொடுத்திருந்தார்.

இந்த மனு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரின் வாகனம் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெயில், மழை உள்ளிட்டவையால் பாதிப்புக்கு உள்ளாகி பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே வாகனத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் மகனான டிடிஎஃப் வாசனிடம் இருந்து வழக்கு விசாரணைக்காக கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே வாகனத்தை ஒப்படைக்க உத்தரவிடக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

#BREAKING | டிடிஎஃப் வாசன் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “மனுதாரர், டிடிஎஃப் வாசனின் தாய் என்பது தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் வாகனத்தை பயன்படுத்தினால் அதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கலாம் என நீதிமன்றம் கருதுவதால் காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.