உயிரிழந்த மாணவர் pt desk
தமிழ்நாடு

மதுரை: திமுக கொடிக் கம்பத்தை அகற்றிய கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் திருவிழா விசேஷங்களுக்கு பந்தல் மற்றும் தோரணம் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் (18). மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மதுரை பாசிங்காபுரம் அமிர்தா திருமண மண்டபத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பந்தல் மற்றும் கட்சிக் கொடிகளை ஊன்றும் வேலைக்காக பழனி சென்றுள்ளார்.

Death

இந்நிலையில், கல்லூரி முடிந்த பின்பு அவரது மகன் நவீன் குமாரும் அவருடன் சேர்ந்து வேலை பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டம் முடிந்த பிறகு சாலையில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பங்களை எடுக்கும் பணியில் நவீன் குமார் ஈடுபட்டுள்ளார். அப்போது மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.