சாதிய வன்கொடுமைகள் - ஆர்.டி.ஐ. ரிப்போர்ட் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் மதுரை முதலிடம் - ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களின் டாப்-10 பட்டியலில் மதுரை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

webteam

செய்தியாளர்: பிரசன்னா

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கீழ் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார். அந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர். என்ன தகவல் அது? பார்க்கலாம்...

கடந்த 2024 மார்ச் மாதம் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 394 என்றுள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள் உள்ளன. அதாவது, அதிக சாதிய வன்கொடுமை நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் மதுரை முதல் இடத்தில் உள்ளது.

ஆர்டிஐ தகவல்

2வது திருநெல்வேலி மாவட்டம் (29 கிராமங்கள்), 3வது திருச்சி (24 கிராமங்கள்), 4வது தஞ்சாவூர் (22 கிராமங்கள்), 5வது தேனி (20 கிராமங்கள்) இடங்களை பிடித்துள்ளன. பட்டியலின் கடைசியாக 38வது இடத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரே ஒரு கிராமம் மட்டும் கண்டறிப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு கூட்டங்கள்:

மேற்கண்ட பட்டியல் வரிசையில் சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், மறுபுறம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2021ல் 597 கூட்டங்களும், 2022ல் 988 கூட்டங்களும், 2023 3,221 கூட்டங்களும், 2024 மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 1,861 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 13வது இடத்தில் உள்ள கோயமுத்தூர் மாவட்டத்தில் வெறும் 11 நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு மொத்தம் 534 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

madurai railway junction

ஆனால், இதே காலகட்டத்தில் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்களே நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது. கடைசி இடமான 38வது இடத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு கிராமம் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த ஒரு கிராமத்திற்கு மட்டும் 136 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

மதுரை, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பிடும்போது கடந்த 2023ம் ஆண்டு விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சாதிய வன்கொடுமைகள் நடைபெறும் கிராமங்களில் மக்களிடையே சாதிய பாகுபாடுகளற்ற நல்லிணக்க கிராமங்களாக மாற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியமுடிகிறது.

முழுமையான ரிப்போர்ட்டை, கீழ் இணைக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அறியலாம்...

Caste Atrocity.pdf
Preview