car accident pt desk
தமிழ்நாடு

மதுரை: நின்றிருந்த வாகனம் மீது கார் மோதிய விபத்து - மதிமுக நிர்வாகிகள் மூவர் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் மதிமுக மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பச்சை முத்து அவரது சகோதரர் அமல்ராஜ் மற்றும் புலி சேகர் ஆகிய மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Accident

மதிமுக மாநில தொண்டரணி அமைப்பாளராக இருந்தவர் பச்சைமுத்து. இவரது சகோதரர் அமல்ராஜ். மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக உள்ளார். இவர்களுடன் புலி சேகர் ஆகிய மூன்று பேர் நேற்று சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டுவிட்டு சென்னையிலிருந்து சொகுசு காரில இன்று அதிகாலை மதுரைக்கு வந்துள்ளனர்.

அப்போது, சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அவர்களது கார் மோதிய விபத்தில் மூன்று பேரும் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடததிற்கு வந்த மேலூர் போலீசார், உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவமனையில் மதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். உயிரிழந்த மூவரும் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள அக்கட்சியின் அமைப்பு செயலாளரும் திருச்சி தொகுதி எம்பியுமான துரை வைகோ, “நான் அரசியலுக்கு வந்தபிறகு எத்தனையோ துக்கங்களை, இறப்புகளை எதிர்கொண்டு இருக்கிறேன். பலர் வயது மூப்பால், நோய்மையால் இறந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இழப்புகளைக் கூட ஓரளவு கடந்து வந்திருக்கிறேன். இவர்களின் மறைவை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு ஊருக்கு திரும்பும்போது இப்படி ஒரு துயரம் நிகழ்ந்து விட்டதே என நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் தவிக்கிறது.

இவர்களின் இழப்புக்கு நாமும் ஒரு காரணமாகி விட்டோமே என மனம் துடிக்கிறது. அந்தக் குடும்பங்களுக்கு நான் என்ன ஆறுதலை சொல்ல முடியும்? என் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, அந்த தம்பிகளின் உயிரற்ற உடல்களை காண கனத்த இயத்தோடும், கண்ணீரோடும் இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல இருக்கிறேன். அந்தக் குடும்பங்களின் துயரில் பங்கேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.