தமிழ்நாடு

மான்களை வேறு இடங்களுக்கு மாற்ற அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

jagadeesh

சென்னை கிண்டி பகுதியில் உள்ள மான்களை வேறு இடங்களுக்கு மாற்ற வனத்துறைக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை, கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்து 500 மான்களை வேறு இடத்திற்கு மாற்ற மாநில வனத்துறை நடவடிக்கை எடுத்தது. மான்களை வேறு இடத்திற்கு மாற்றத் தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர்‌ பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

நாய்கள் கடிப்பதாலும், வாகனங்கள் மோதுவதாலும் மான்கள் உயிரிழப்பதால் அவற்றை தேசிய பூங்காக்களில் பாதுகாப்பாக விடவே நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக வனத்துறை பதில் மனுதாக்கல் செய்தது. கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் உயிரிழந்ததாக தெரிவித்த வனத்துறை, விதிகளின் படியே மான்கள் இடமாற்றம் செய்யப்படும் என்றும் உறுதியளித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிண்டியில் உள்ள மான்களை இடமாற்றம் செய்வதில் தவறில்லை எனக் கூறிய நீதிபதிகள், முரளிதரன் தொடர்ந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட மான்களின் நிலை குறித்து ஜனவரி 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்த‌ரவிட்டனர்.