உயர்நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

விஷச்சாராய விவகாரம் - சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு | தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி...

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் விஷச் சாராய விற்பனை நடக்காது என்பதால், அவர்களது பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர். அப்போது, “விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி இருந்தனர். முடிவில் பேசிய நீதிபதிகள், “விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. விஷச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? விஷச்சாராய விற்பனையைத் தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இறுதியில் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.