சென்னை உயர்நீதிமன்றம் PT
தமிழ்நாடு

“மக்கள் வரிப்பணத்தில் பள்ளிகளில் சாதிப்பெயர்கள்..” நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

PT WEB

செய்தியாளர்: சுப்பையா

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி நேர்காணல் ஒன்று அளித்திருந்தார். இதனை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அளித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், “ஏராளமான அரசு பள்ளிகள் கல்வராயன் மலைப்பகுதியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என்று கூறப்படவில்லை. அது மட்டுமில்லாமல் பொத்தாம் பொதுவாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்

மேலும், “மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றை அகற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியது போல அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சாதிய பெயர்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்

அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது - நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்

இந்த வழக்கில் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், “அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழுவுடன் உயர் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அப்போது வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், ஆனால் அந்தத் தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை என்றும் கூறி அது தொடர்பான அரசு ஆவணத்தை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.

அதற்கு நீதிபதிகள் “உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அரசு குழுவிற்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் நீங்கள் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்” என அனுமதி வழங்கினார்.