Madras high Court pt desk
தமிழ்நாடு

மணல் குவாரி முறைகேடு புகார்: தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம்

webteam

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்கம், 56.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ed

இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யவும், சொத்து முடக்கத்தை நீக்கவும் கோரி தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, விஜய் மேகநாத் ஆகியோர், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவளச் சட்டம் சேர்க்கப்படாத நிலையில், இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சட்ட விரோதம். அமலாக்கத் துறையின் அதிகார வரம்புக்குள் வராது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்கதுறை அதிகார வரம்புக்குள் வராது” எனக்கூறி தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேபோல, சொத்து முடக்கத்தையும் நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.