கல்வராயன் மலை, சென்னை உயர்நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

1976ல் இந்தியாவோடு இணைந்த கல்வராயன் மலைப்பகுதி.. அம்மக்களுக்காக அரசு செய்தது என்ன? நீதிமன்றம் கேள்வி

PT WEB

செய்தியாளர் - வி.சுப்பையா

1976ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட கல்வராயன் மலை

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த வழக்கும், சிபிஐ விசாரணை கோரிய வழக்கும் ஒன்றல்ல என நினைக்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள், “அந்த வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை; இந்த வழக்கு கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்தது” எனத் தெரிவித்தனர்.

மேலும், “ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட, 95 சதவீதம் பழங்குடி மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி 1976 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு முதல்தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்து இருக்கிறது. அந்த பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதா?

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, “அரசு அதிகாரிகள், அரசை பாதுகாக்கும் வகையில் அறிக்கை அளிப்பார்கள்” என அச்சம் தெரிவித்தார். மேலும் அவர், “அந்த பகுதியில் பேருந்து வசதி, மருத்துவமனைகள் போன்றவை இல்லை; கர்ப்பிணிகளை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோளில் சுமந்து செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, உண்மை தகவல்களை அறிக்கையாக அளிப்பதை உறுதி செய்ய, நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், “1996 முதல் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசுகள், அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கியிருக்கிறதா? இல்லையா? இதை கவனிப்பது அரசின் அரசியலமைப்பு சட்ட கடமை அல்லவா? அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என கண்டறிய வேண்டும்” எனக் குறிப்பிட்டனர்.

தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

தொடர்ந்து, “1947 முதல் நாம் உரிமைகளை அனுபவித்து வருகிறோம். ஆனால் 1976 ல் இருந்துதான் அவர்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் நாமும் அங்கிருந்து கஷ்டங்களை உணரவேண்டும். அரசின் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம்

இத்தனை ஆண்டுகளாக ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் என்ன செய்கின்றனர்? கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? அந்த பகுதி மக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? இவை அனைத்தையும் ஜூலை 24ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், பத்திரிகையாளர்கள், கல்வராயன் மலைப்பகுதி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களும் அறிக்கை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.