தமிழ்நாடு

மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் திருமணம் குறித்து அவதூறு – நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷ் என்பவருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாலாஜி மோகனும், ஏழாம் அறிவு, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவும் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், தங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூ டியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் கூறி, பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நடிகை கல்பிகா கணேஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.