தமிழ்நாடு

புதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி

webteam

புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலையில் கண்டெய்னர் லாரியும் வேனும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெம்போ டிராவலர் வேனில் ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேன் புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுதலாக படுகாயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

கன்டெய்னர் லாரி தவறான பாதையில் வந்து வேன் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.