Heat stroke pt web
தமிழ்நாடு

மதுரை | வெயில் தாக்கம்... ஓய்வெடுக்க சென்ற லாரி ஓட்டுநர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

PT WEB

செய்தியாளர் - ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுரை - திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை  பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவர், தனது கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க சென்றுள்ளார். அப்போது வெயிலின் தாக்கத்தால் வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர் திருச்சி துவாக்குடி பகுதியில் இருந்து காற்றாலை உபகரணங்களை கனரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு இன்று காலை படுத்து உறங்கி உள்ளார்.

பின் இன்று மாலை அவரை அருகில் இருந்தவர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் அசைவற்றுக் கிடந்ததால் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

கடும் வெயில் காரணமாக தரையில் எந்தவித விரிப்புகளும் இன்றி படுத்து உறங்கியதால் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மேலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காற்றாலை உபகரணங்களை கனரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் ஓய்வறை பகுதியில் படுத்து உறங்கிய போது வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.