தமிழ்நாடு

“ஒருநாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது” - திருடனின் அதிரவைக்கும் வாக்குமூலம்

webteam

சேலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபர் கைது செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிய நபரை போலீஸார் பிடித்து விசாரித்தப்போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் ஓமலூரைச் சேர்ந்த அய்யந்துரை என்பது தெரியவந்தது. அய்யந்துரை, கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்து 40 நாட்கள் ஆவதாகவும், அந்த 40 நாட்களும் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அய்யந்துரையிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள், பத்து சவரன் நகை, ஒரு முருகன் சிலை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த திருடன் ஒரே இடத்தில் தங்காமல் பகல் முழுவதும் பேருந்திலேயே பயணித்து அப்போது தூங்குவதாகவும், இரவில் ஒரு இடத்தை தேர்வு செய்து வீடு புகுந்து கொள்ளை அடிப்பதை‌ வழக்கமாக கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கு ஒரு நாள் திருடவில்லை என்றாலும் தூக்கம் வராது என விசாரணையின்போது அய்யந்துரை கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.