தமிழ்நாடு

``திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி”- கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு

நிவேதா ஜெகராஜா

“அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி , திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி" என கோவை செல்வராஜ் பேட்டியளித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த பிறகு, அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால் முனுசாமி மகன் எம்.சதீஷ்க்கு கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை 99 ஆண்டு வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் வழங்கியிருக்கிறார் அமைச்சர் காந்தி. பெட்ரோல் பங்க்கை கடந்த 25.5.22 ல் அவரேவும் திறந்து வைத்துள்ளார்.

உண்மையில் அதிமுக ரகசியங்களை முனுசாமிதான் திமுகவிற்கு கூறுகிறார். திமுகவின் கைக்கூலியாக வேலை செய்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அதிமுகவில் உள்ள 7 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் நிரபராதி என நிரூபனம் ஆகும் வரை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும், கட்சிப் பதவியை விட்டு விலக வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் லஞ்சம், குடும்ப அரசியலை எதிர்க்கும் இயக்கமாக அதிமுக இருக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இல்லம் முன்பு அப்பாவி தொண்டர்களை நிறுத்தி ஏன் கோஷம் போட வைக்க வேண்டும்? தனி நபர்களுக்காக கட்சித் தொண்டர்களை பயன்படுத்தக்கூடாது” என்றார்.