பளூ தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற பாட்டி PT
தமிழ்நாடு

வயது தடையேயில்லை! பளு தூக்கும் போட்டியில் மாஸ் காட்டிய சேலை கட்டிய 82 வயது இரும்பு பெண்மணி!

PT WEB

வயது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே ஐந்தாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் 82 வயது மூதாட்டி ஒருவர். அவரது சாதனை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

திரைப்படம் ஒன்றில் விவேக் ஒட்டி வைக்கும் அட்டை எடை கற்களை தூக்கி எறிந்து விட்டு செல்வார் பரவை முனியம்மா , ஆனால் தனது பேரன் தூக்கும் உண்மையான எடை தட்டுகளை சர்வ சாதாரணமாக தூக்குகிறார் நாம் பார்க்கும் இந்த கிட்டம்மாள்.

தளர்ந்த பேச்சு, முதுமை உருவம் , இவற்றை வைத்தெல்லாம் எடைபோட்டு விட முடியாது இந்த 82 வயது கொண்ட சேலை கட்டிய இரும்பு பெண்மணியை, ஆம் 50 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்குகிறார்.

யார் இந்த கிட்டம்மாள்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி இந்த கிட்டம்மாள். இவர் தனது மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோருடன் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் வசித்து வருகின்றனர்.

இவரது பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வரும்போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைபட்டுள்ளார்.

பேரன்களைப் பார்த்து வந்த பளுதூக்கும் ஆசை!

இரண்டு பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பாட்டியின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், பாட்டியை கோவையில் கடந்த மே ஒன்றாம் தேதி "Indian fitness federation" சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆசை.. முயற்சி.. வெற்றி - அசத்திய மூதாட்டி!

பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தனது சாதனை குறித்து கிட்டம்மாள், ”பெண்கள் எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எனது உணவு முறையே காரணம். பேரன்கள் மற்றும் உடற்பயிற்சியாளரின் துணையோடு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றேன். எனது கணவர் ஊட்டசத்து உணவுகளை எனக்கு வாங்கி கொடுத்து வெற்றி பெற ஊக்கமளித்தார்” என்று மகிழ்வுடன் கூறுகிறார்.

கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம்பழம், முந்திரி போன்ற உணவு முறைகளை எடுத்துக் கொள்வதால் பாட்டியின் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்த அவரது பேரன் ரித்திக், தனது பாட்டியின் சாதனை வியப்பளிப்பதாகவும் தொடர்ந்து அவர் பல்வேறு சாதனைகளை புரிய உறுதுணையாக இருப்போம் என்கிறார்.

சாதனை பெண்மணிக்கு பின்னால் உடற்பயிற்சியாளர், பேரன், என ஆண்கள் இருந்தாலும், மனைவியின் வெற்றியை தனது வெற்றியாய் பாவித்து வரும் கிட்டம்மாளின் கணவர் வெட்கட்ராமன் பேசுகையில், பெண்கள் சமைத்து தரும் உணவை உண்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என அறிந்து நடப்பதுதான் நல்ல கணவன்மார்களின் கடமை என பெருமை பொங்க பேசினார்.

வெட்கட்ராமன் தனது மனைவி இன்னும் பல சாதனைகளை படைப்பார் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

இன்றைய இளைஞர்கள், உணவு முறையை முறையாக கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை உணர்த்தும் வகையிலும், 82 வயதிலும் மனம் தளராமல், திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாள் அவர்களுக்கு சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சி கூடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.