தமிழ்நாடு

கொடைக்கானல்: நட்சத்திர ஏரியில் அசைவின்றி மிதந்த நபரால் பரபரப்பு

kaleelrahman

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதந்து பரபரப்பை ஏற்படுத்திய நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. கொடைக்கானல் ஏரியின் நடுவில் நீந்திய இவர், நீண்டநேரமாக மிதந்தபடி இருந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏரியில் யாரோ ஒருவரது பிணம் மிதக்கிறது என்று போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படகில் சென்று பார்த்தனர். அப்போது தங்கபாண்டி மிதந்து கொண்டு இருந்துள்ளார். இதை அடுத்து நீந்தியபடி கரைக்கு வந்த அவரை, தீயணைப்புத் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தங்கபாண்டியை விசாரித்தபோது தான் ஒரு சிவனடியார் என்றும், தண்ணீரில் மிதந்தபடி ஆசனம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து தங்கபாண்டி தண்ணீரில் மிதந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.