தமிழ்நாடு

கீழடியில் மத்திய ஆய்வுப் பணிகள் மூடல்: மீண்டும் தொடரும் என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

webteam

கீழடியில் 3ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி தற்போது வேகவேகமாக நடந்து வருகிறது. அங்கிருந்த மத்திய அரசு ஊழியர்களும் கூடாரங்களையும் பிரித்துவிட்டு வெளியேறி வருகின்றனர்.

கீழடியில் இதுவரை மூன்று கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்துள்ளன. 4ம் கட்ட பணிகள் தொடரும் என எதிர்பார்த்த நிலையில் மத்திய தொல்லியல் துறை நிதி ஒதுக்கீடு செய்யாததால் 4ம் கட்ட பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவு பெற்ற அகழ்வாய்வு பணியின் முடிவில் எந்தப் பொருட்களும் கிடைக்காததால் தோண்டப்பட்ட குழிகள் இன்று மண் போட்டு மூடப்பட்டன. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதனிடையே தமிழக அமைச்சர் பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழக தொல்லியல் துறையைக் காட்டிலும் மத்திய அரசின் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள் உள்ள காரணத்தால் மட்டுமே கீழடி அகழ்வு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் கீழடியின் வரலாற்றை மறைப்பதாக நச்சுக் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய நிறுவனத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒரு தமிழர்தான். கீழடியில் மேலும் ஆராய்ச்சிகள் தொடரும். அதை தமிழக அரசு உறுதிசெய்யும் என்று கூறினார்.