தமிழ்நாடு

அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதச் சிறை: காவல்துறை எச்சரிக்கை!

webteam

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால் 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3-ன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் சீருடையில் உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ஆய்வு செய்ய முடியும்.

எனவே, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகனங்களை ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் வசம் வைத்திருக்க அறிவுறுத்தப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.