Raja pt desk
தமிழ்நாடு

கரூர் | மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது தவெக நிர்வாகியா? - மாவட்ட நிர்வாகி கொடுத்த விளக்கம்

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி ராஜா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நி;லையில் ராஜா தவெக நிர்வாகி இல்லை என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது..

PT WEB

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன். இவரது மனைவி சங்கீதா (44). குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர். கடந்த ஆண்டு திருச்சி அருகே திருவெரும்பூரில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினோம். எங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்றுத் தருவதாக கோட்டைமேடு கடைவீதி தெருவில் வசித்து வரும் ராஜா (40 என்பவர் அறிமுகமானார்,

இதன் மூலம் அவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கார் வாங்க நினைத்தேன். அப்போது ராஜா என்னிடம் அவருக்கு தெரிந்தவரை அழைத்து வந்து இவரிடம் உள்ள கார் நன்றாக இருக்கும் என்று சொல்லி என்னிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார், நானும் அவரை நம்பி கையெழுத்து போட்டேன், பின்னர் கார் வாங்கும் முடிவை மாற்றிக் கொண்ட நான், அவரிடம் ஆவணங்களைக் கேட்டேன். அதற்கு அவர் தருகிறேன் என்று சொன்னார்.

Arrested

இந்நிலையில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து எனது வீட்டிற்கு வந்த அலுவலர்கள், கார் வாங்கியதற்கான தவணைத் தொகையை செலுத்துமாறு கூறினர், அதிர்ச்சியடைந்த நான், ராஜாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எனது வீட்டிற்கு வந்த ராஜா, என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார், என்னை ஏமாற்றி மோசடி செய்து எனது ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக கார் வாங்கி தவணைத் தொகை கட்டாத ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து புகாரை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பிரபாகரன், மோசடி செய்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்து குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜா, குளித்தலை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை குழு நிர்வாகியாக உள்ளதாக தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தவெக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ”கரூர் மாவட்டம் குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தவெக நிர்வாகி என்று செய்திகள் வந்து கொண்டுள்ளன.

vijay

கைது செய்யப்பட்டுள்ள ராஜாவுக்கும், தவெகவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருக்கு தவெகவிலோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதுவரை அவர் எந்த பொறுப்பிலும் இலலை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.