wild elephant pt desk
தமிழ்நாடு

பயிர்களை சேதம் செய்து போக்கு காட்டிய கருப்பன் யானை: 6வது முறையாக பிடிபட்டது எப்படி?

PT WEB

ஈரோடு மாவட்டம் தாளவாடி , ஜீரஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த 'கருப்பன்' என்ற யானையை பிடிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது.

வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த காட்டு யானையை ஐந்து முறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தோல்வி அடைந்த நிலையில், காட்டு யானைக்கு 'கருப்பன்', 'STR JTM 1' (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி, தாளவாடி ஆண் யானை 1) என்று பெயர் மாற்றப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை 6வது முறையாக காட்டு யானையை பிடிக்கும் பணிக்கு ஆபரேஷன் 'STR JTM 1' என்ற பெயரில் பணிகள் துவங்கப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மகராஜன்புரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் வந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் ஓசூர் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இதனையடுத்து பிடிபட்ட காட்டு யானையை கும்கி யானைகள் சின்னத்தம்பி, மாரியப்பன் உதவியுடன் லாரியில் ஏற்றி வனப்பகுதியில் விடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.