தமிழ்நாடு

காரைக்கால்: குற்றவழக்கில் கைது செய்யபட்ட மகன் - அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

காரைக்காலில் பெற்ற மகனை குற்ற வழக்கில் கைது செய்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த விழிதியூர் சங்கரன் தோட்டத்தைச் சேர்ந்த முருகையன் (48) - வசந்தி (45) தம்பதியரின் மகன் கார்த்திகேசன் (27). டிரைவர் வேலை செய்து வரும் இவரை, குற்ற வழக்கில் கைது செய்திருப்பதாகவும் மறுநாள் காவல் நிலையத்திற்கு வருமாறும் நேற்று இரவு முருகையன் செல்போனுக்கு மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்திலிருந்து போன் வந்துள்ளது.

இதனை மனைவி வசந்தியிடம் கூறிய முருகையன் வேலைக்குச் செல்லாமல் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததை மனதில் நினைத்து சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்குச் சென்ற முருகையன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த வசந்தி அவரை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகையைனை மீட்டு விழிதியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர் சிகிச்சையில் இருந்த முருகையன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நிரவி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.