Murder case pt desk
தமிழ்நாடு

கன்னியாகுமரி | முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை!

webteam

செய்தியாளர்: மனு

கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். இவர், அந்த பகுதியில் டெம்போ ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷா ராணி, திருவட்டார் பேரூராட்சி 10 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலாராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு ஜாக்சன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த 6 பேர் கும்பல் ஜாக்சனிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ஜாக்சனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.

Murder case

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜாக்சனை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்குசென்று திருவட்டார் போலீசார், விசாரணை நடத்தினர். அதில் ஜாக்சனை வெட்டிக் கொன்றது, வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்பு ஜாக்சனுக்கும், ராஜகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறி அந்த வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே ஜாக்சன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கொலையில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.