சனந்தனன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

குமரி: பரோட்டா சாப்பிட்ட போது திடீரென வந்த விக்கல் - மூச்சுத் திணறிய கொத்தனாருக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

செய்தியாளர்: மனு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாங்கை பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் சனந்தனன் (40). கொத்தனாரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், மனைவி மற்றும் குழந்தை பிரிந்து சென்ற நிலையில், தனது தாயார் மேரிபாய் (70) என்பவருடன் வசித்து வந்திருக்கிறார் சனந்தனன்.

சனந்தனன்

இந்நிலையில் நேற்று மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து பரோட்டா வாங்கி வந்த அவர், வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென விக்கல் வந்துள்ளது. இதனால், சாப்பிட முடியாமல் திணறியுள்ளார்.

அப்போது தன் தாயார் கொடுத்த தண்ணீரை குடித்த அவர், சில நிமிடங்களில் கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட தாயார் அலறவே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

உயிரிழந்த சனந்தனன் வீடு

அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.