Accused pt desk
தமிழ்நாடு

குமரி: திருமணத்தை மீறிய உறவை கண்டித்த தந்தை – கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. பின்னணி என்ன?

webteam

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது இரண்டாவது மகள் தாயுடனும், மூத்த மகள் ஆர்த்தி (21) தந்தை சுரேஷ்குமார் உடனும் வசித்து வருகின்றனர்.

Suresh kumar

இந்நிலையில், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் சுரேஷ்குமார் கடந்த 26 ஆம் தேதி மது குடித்து வீட்டிற்கு வந்த நிலையில், காலையில் உயிரிழந்து விட்டதாக மகள் ஆர்த்தி அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். தகவலின் பேரில் பூதப்பாண்டி போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு சுரேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சுரேஷ்குமாரின் மரணம் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், இயற்கைக்கு மாறாக சுரேஷ்குமார் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடைய ஆர்த்தியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரை கண்காணித்து வந்த நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுரேஷ்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Death

தந்தையுடன் வசித்து வந்த ஆர்த்தி, இவர்களது தூரத்து உறவினரும் 3 குழந்தைகளுக்கு தந்தையுமான சுரேஷ்பாபு (40) என்பவருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் பழகிவந்ததாக கூறப்படுகிறது. மது அருந்தும் பழக்கம் உள்ள ஆர்த்தி, சுரேஷ்குமார் வீட்டில் இல்லாத நேரங்களில் சுரேஷ்பாபுவுடன், தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தந்தை சுரேஷ்குமார் மகளை கண்டித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சுரேஷ் பாபுவுடன் சேர்ந்து தந்தை சுரேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் ஆர்த்தி.

இந்நிலையில், சுரேஷ்குமாருக்கு மது வாங்கிக் கொடுத்த சுரேஷ்பாபு, இருவரும் வீட்டருகே அமர்ந்து குடித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மது குடித்த சுரேஷ்குமார், சுயநினைவை இழந்துள்ளார்.

அப்போது அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற சுரேஷ் பாபுவும் ஆர்த்தியும் சேர்ந்து சுரேஷ்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து அடுத்த நாள் காலையில் ஆர்த்தி, தனது தந்தை உயிரிழந்து இருப்பதாக அக்கம் பக்கத்தில் தெரிவித்து சுரேஷ்குமாரின் மரணம் அதிகமான மது போதையில் ஏற்பட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.

Arrested

தற்போது உடற்கூறாய்வில் கிடைக்கப்பெற்ற தகவலால் இவர்களது நாடகம் அம்பலமாகியுள்ளது. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கொலை வழக்காக மாற்றி ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபுவை பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.