தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம் pt desk
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம் - பல கோணங்களில் போலீசார் விசாரணை

உத்திரமேரூர் அருகே சொத்துத் தகராறில் தனியார் தொழிற்சாலை ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வழக்கில் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கம் ஏரிக்கரை அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்

விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் உத்திரமேரூர் அடுத்த ஒட்டன்தாங்கல் ஊராட்சி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சுள்ளி என்பவரின் மகன் முருகன் (34) என்பதும், அவர் திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முருகனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கும் நிலம் விற்பனை செய்த விவகாரத்தில் முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், விஜயன் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.