தமிழ்நாடு

370 சட்டப்பிரிவை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் - கமல்ஹாசன்

webteam

370 மற்றும் 35A ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

காஷ்மீர் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், '' 370 மற்றும்  35A ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல். இது போன்ற முக்கிய முடிவுகள் மீது பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்துள்ளது.

370 மற்றும்  35A ஆகிய சட்டப் பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்க வேண்டும். 

370 மற்றும்  35A ஆகிய சட்டப் பிரிவுகளை சட்டபூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கபோக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்