முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்” - விஷச்சாராயம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

PT WEB

இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து கிட்டத்த 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்கள் இறந்த செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வார்த்தை விளையாட்டு விளையாடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக தான் சுட்டிக்காட்டி வந்தும், ஏற்கெனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சாடியுள்ளார்.

"கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல, மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள குறிப்பில், மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 உயிர்களை பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுவதாக கூறியிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் காவல்துறையும், அரசும் முடங்கி கிடப்பதாக சாடியுள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டவிரோத மதுபான தயாரிப்பை தடுப்பதில் குறைபாடுகள் தொடர்வதாகவும் கூறியிருக்கிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளச்சாராயம் உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு

இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.