தமிழ்நாடு

அரியலூர் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

webteam

அரியலூர் மாவட்டத்தில் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசுவின் உடல் மீட்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நந்தியாற்று வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் கண்டிராதீர்த்தத் ஏரியில் தொடங்கி சுமார் 20 கி.மீ தூரம் ஓடி பாசனம் அளித்து வருகின்றது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் இறந்த நிலையில் சிசு ஒன்று மிதப்பது குறித்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிசுவை மீட்டனர்.

அப்போது இறந்து கிடந்தது பெண் சிசு என்பதும், தொப்புள் கொடியுடன் இருப்பதால் பிறந்து ஓரிரு நாட்களே இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து, அரியலூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். மேலும், விஏஓ சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.