tuticorin pt
தமிழ்நாடு

”ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச் சூடு நடத்துவதா?”- வெகுண்டெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

PT WEB

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ-யின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை. அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும்” என்று சிபிஐக்கு கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக மேலும், “சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாதனத்தை காட்டுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது. ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். அதற்கு போலிசாரும் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.