தமிழ்நாடு

அடக் கொடுமையே... இப்படிக்கூட கொள்ளை அடிக்குறாங்க... பொதுமக்களே உஷார்...!

அடக் கொடுமையே... இப்படிக்கூட கொள்ளை அடிக்குறாங்க... பொதுமக்களே உஷார்...!

webteam

புதுக்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீசார் என்று கூறி 5 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி காமாட்சி(66). இவர் நேற்று மாலை வடக்கு ராஜ வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தீபாவளி நேரத்தில் நகைகளையும் பணத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும், பொதுவெளியில் இவ்வாறு எடுத்து வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.

மேலும், அந்த மூதாட்டியிடம் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை பத்திரமாக வைத்துக் கொடுப்பது போல் நாடகமாடி ஏமாற்றி பறித்துச் சென்றனர். இதனையடுத்து காமாட்சி அருகே இருந்தவர்களின் உதவியோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் காமாட்சியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் 4 பேர் செல்வதுபோல் உள்ள காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.