தமிழ்நாடு

நினைவு இல்லமாகும் ஜெயலலிதா வீடு: வேகமெடுக்கும் பணிகள் !

நினைவு இல்லமாகும் ஜெயலலிதா வீடு: வேகமெடுக்கும் பணிகள் !

jagadeesh

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு மறைந்தார். சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம் அமைந்துள்ள நிலம் கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போயஸ் தோட்ட இல்லம் அமைந்துள்ள நிலத்திற்கு அடியில் எந்த விதமான கனிம வளங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.