தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை

webteam

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சீருடை அணிந்தபடி உணர்ச்சிவசப்பட்டு பேசிய காவலர் மாயழகு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விவகாரம், சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் மாயழகு, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அப்போதைய சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், மாயழகு மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவித்தார்.

இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பின், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கான பதவி உயர்வு, சம்பள உயர்வு பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் சக காவலர்களும்,சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.