தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு

ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு

webteam

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டிசம்பர் 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டனர். 

இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் சென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்‌ உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் திட்டமிட்டபடி வரும் 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை எனவும்  புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிசம்பர் 6ஆம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும். பேச்சு நடத்தாவிடில் டிசம்பர் 7 முதல் போராட்டம் தீவிரமடையும் என தெரிவித்தார்.

ஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

அந்த மனுவில் கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால்  பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இதனை அவசர வழக்காக பிற்பகல் 1 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.