தமிழ்நாடு

போராட்டம் நாளையும் தொடரும் - ஜாக்டோ ஜியோ திட்டவட்டம்

webteam

நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நாளையும் போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக கருதி தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நாளையும் போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். மதுரையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவித்தார்.