மகா விஷ்ணு pt web
தமிழ்நாடு

சென்னை: “மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியது உண்மைதான் ஆனால்...” - மகா விஷ்ணு பரபரப்பு வாக்குமூலம்

ஜெ.அன்பரசன்

சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், தான் சித்தர்கள் ஆசீர்வாதத்தால் சொற்பொழிவுகள் நடத்தி வருவதாகவும், தனது யூ-டியூப் சேனலை 5 லட்சம் பேர் பின் தொடர்வதாகவும், பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும், 5 நாடுகளில் இது போன்ற சொற்பொழிவுகளை ஆற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும், இது போன்று பல இடங்களில் தான் பேசி இருப்பதாகவும் மகா விஷ்ணு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், சித்தர்கள் தன்னிடம் பேசுவார்கள், சித்தர் சொன்னதை தான், பேசினேன். தன்னை சித்தர்கள் தான் வழி நடத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் பற்றி தான் பேசியதாகவும், தவறாக ஏதும் பேசவில்லை எனவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதியிடமும் மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மகா விஷ்ணுவை விமான நிலையத்தில் இருந்து போலீசார் அழைத்து சென்ற பின், போலீஸ் வாகனத்தில் வைத்தே அவரை பல்வேறு இடங்களில் சுற்றி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மகா விஷ்ணு

இரவு உணவை போலீசார் விஷ்ணுவுக்கு வாங்கிக் கொடுத்த போது, தானும் தினந்தோறும் பலருக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளேன் எனவும், போலீசாரை கடவுள் ஆசீர்வதிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.