தமிழ்நாடு

மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது வெறுப்பை உமிழ்வது மதத்தின் நோக்கமல்ல - உயர் நீதிமன்றம்

kaleelrahman

மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது சம்பந்தப்பட்ட மதத்தின் நோக்கம் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்து மத கடவுள்களையும், கோயில்களையும் விமர்சித்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி. லாசரஸ் மீது தமிழகம் முழுவதும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2016 ஆம் ஆண்டு, நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்பாளர்களின் கேள்விக்கு மட்டுமே தான் பதிலளித்ததாகவும், இந்து மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தும் கூறவில்லை என மோகன் சி.லாசரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோல பேசப்போவதில்லை எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த நீதிபதி, தங்கள் மதம் பெரியது எனக்கூறி, மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது, மதத்தின் நோக்கமோ, மத நம்பிக்கைகளின் நோக்கமோ அல்ல எனக் குறிப்பிட்டார்.

மத போதகர்கள் மிகுந்த பொறுப்புடன் பேச வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, பிற மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என ஏசுநாதர் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.