தமிழ்நாடு

இடம் மாறுகிறதா நடிகர் சங்கத் தேர்தல்? - காவல்துறை கடிதம்

webteam

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறது. இதற்கான பிரசாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகளைச் சந்தித்து ஆதரவும் திரட்டி வருகின்றனர். நடிகர் சங்கத் தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அதாவது கல்லூரி அமைந்திருக்கும் இடம் குறித்து காவல்துறை கல்லூரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்படி நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, ஒற்றுமையற்ற சூழல் நிலவுகிறது. நீதிபதிகளின் வீடுகள், முதலமைச்சர், அமைச்சர்கள் பயணிக்கும் பாதை என்பதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் என்பதால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே அங்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது நல்லது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கல்லூரி நிர்வாகம் தேர்தல் நடத்தக் கூடிய அதிகாரியான பத்மநாபனுக்கு அனுப்பியுள்ளது.