Director Pa.Ranjith pt desk
தமிழ்நாடு

`நீங்கதாண்ணே வழிநடத்தணும்’... ரஞ்சித்தை நோக்கி வந்த குரல் - தமிழ்நாடு BSP-யின் தலைவராகிறாரா?

webteam

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செய்தியறிந்த உடனேயே ஸ்பாட்டுக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் கதறியழுதுத் துடித்தார்..,அஞ்சலி செலுத்துவதற்காக அவர் உடல் வைக்கப்பட்டிருந்தபோதும், மேடையிலேயே தேம்பித் தேம்பி அழுதார்..,இறுதி நிகழ்வு முடியும்வரை உடனேயே இருந்தார். மறைந்த ஆம்ஸ்ட்ராங்குக்கும் இயக்குநர் ரஞ்சித்தும் நெருக்கமானது எப்படி, அடுத்த பிஎஸ்பியின் தலைவராக ரஞ்சித் வரவேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா?.., விரிவாகப் பார்ப்போம்.

Pa.Ranjith

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு கல்லூரி காலம் தொட்டு நன்றாக அறிமுகமானவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங்...அவரின் முதுகலை படிப்புக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், அவர் திரையுலத்தில் சாதிப்பதற்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்...

இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் இருவருக்குமே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனரான பூவை மூர்த்தி...தடாலடியாகவும் அறிவுபூர்வமாகவும் பேசுவதில் வல்லவரான பூவை மூர்த்தி, பட்டியலின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். தவிர, பல பட்டியலின தலைவர்களுக்கு முன்னோடியாகவும் இருந்தவர் பூவை மூர்த்தி...அதுமட்டுமல்லாது, ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் இருவருக்குமே அம்பேத்கர்தான் முன்னோடி...அம்பேத்கரின் கொள்கைகளை அரசியல் வழியாக ஆம்ஸ்ட்ராங்கும் திரை வழியாக ரஞ்சித்தும் முன்னெடுத்து வந்தனர்.

அதுமட்டுமல்ல, சிறுவயது முதல், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்திருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் பேசியுள்ளார் பா.ரஞ்சித். அதேபோல, பா. ரஞ்சித் நடத்தி வரும், நீலம் பண்பாட்டு மையத்தின்மூலம் நடத்தப்படும், வானம் கலைத் திருவிழா, 'மார்கழியில் மக்களிசை’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் ஆம்ஸ்ட்ராங் கலந்துகொள்வார். அந்தளவுக்கு இருவரும் கொள்கை வழியாக மிகவும் நெருக்கமான நண்பர்கள்..,நட்பு என்பதையும் தாண்டி வழிகாட்டி என்பதாலேயே ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தை இயக்குநர் ரஞ்சித்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

Pa.Ranjith, Armstrong

மரணச் செய்தி கேள்விப்பட்ட உடனேயே ஸ்பாட்டுக்கு வந்தவர் இறுதி நிகழ்வு முடியும்வரை சோகத்துடனேயே இருந்தார்...ரஞ்சித் மட்டுமல்லாது ஆம்ஸ்ட்ராங்கை அண்ணனாக, வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட பலர் இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது...இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் அளவுக்கு, அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியிருப்பதோடு, ஆக்கப்பூர்வமான அரசியலையும் முன்னெடுத்து வருபவர் ரஞ்சித்..,அதனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக நீங்களே எங்களை வழிநடத்தவேண்டும் என இயக்குநர் ரஞ்சித்திடம் ஒரு சில இளைஞர்கள் கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித்தின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான தமிழ்ப்பிரபா தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்...அதில், ``இந்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலும், இறுதி ஊர்வலத்திலும் எந்த ஒரு வன்*முறையும் நிகழாமல் நீ அடக்கம் செய்யப்பட்டாய். ஒரு தலைவன் தன் மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறான் என இந்த மாநிலம் அறிந்து கொள்வதற்கு நீ உன் உயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாய் அண்ணா. “ஒரு கூட்டத்தோட தலைவன தூக்கிட்டா இனி எல்லோரும் சிதறிப்போயிடுவானுங்க. இப்போ செய்” என மெட்ராஸ் படத்தில் வில்லன் பேசும் வசனம் வரும். ஆனால் கூட்டம் சிதறவில்லை முன்பெப்போதும் விட தீவிரமாக ஒன்றிணையும் காலமும், தேவையும் உருவாகியிருப்பதாகவே பார்க்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.