தமிழ்நாடு

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? - விசாரணையில் அம்பலம்

webteam

குரூப் 2 ஏ தேர்வில் விடைத்தாளை மாற்றி இணைத்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குரூப் 2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தால் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி என்பது குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் எளிதில் அழியக்கூடிய பேனாவை வைத்து மோசடியில் ஈடுபட்டது போல், குரூப் 2 ஏ தேர்வில் விடைத்தாளை மாற்றி இணைத்து மோசடி நடைபெற்றுள்ளது.

ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதியவர்கள் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள், முதல் 20 கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதியுள்ளனர். மற்ற கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. இதை குறியீடாக வைத்து, ஜெயக்குமார் என்பவரின் தலைமையில் இருக்கக்கூடிய மோசடி கும்பல் மீதமுள்ள விடையை நிரப்பியுள்ளது. இதனால் 42 பேரும் தேர்ச்சி பெற்று வேலை வாங்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் மையத்தில் இருந்து சென்னைக்கு வந்த விடைத்தாள்களை மாற்றி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடிப்பதில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.