தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவு

rajakannan

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் மாணவர் சேர்ந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ஒரு மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக புதிய தலைமுறை கள ஆய்வு செய்து பிரத்யேக செய்தியை வெளியிட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி சார்பில் டீன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்தது பற்றி உயர்மட்டக் குழு விசாரிக்கும். மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும். 

+2 முடித்துவிட்டு தொடர்ந்து 3 ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா சேர்ந்துள்ளார். ஆள்மாறாட்டம் குறித்து அனைத்து ஆவணங்களையும் காவல்துறையிடம் வழங்கியுள்ளோம். ஆள்மாறாட்டத்தை தடுக்க எதிர்காலத்தில் மாணவரிடம் புகைப்படத்துடன் கைரேகையும் பெறப்படும்.

மின்னஞ்சலில் 2 புகைப்படங்கள் கொடுத்துள்ளனர்; இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. 4 பேராசிரியர்கள் கொண்ட குழு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. விசாரணையில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதியானால் மாணவர் நீக்கப்படுவார்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மன உளைச்சல் காரணமாக கல்லூரியில் இருந்து விலகுவதாக மாணவர் உதித் சூர்யா கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் அவர் தெரித்துள்ளார்.