அமைச்சர் சிவசங்கர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நெருங்கும் பொங்கல்... தொழிற்சங்கத்தினருடன் எப்போது அரசு பேசும்? அமைச்சர் சிவசங்கர் பிரத்யேக பேட்டி!

ஜெனிட்டா ரோஸ்லின்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவிருக்கும் நிலையில் வரும் 9 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனை சங்கத்தினர் தற்காலிகமாக கைவிட வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தலைமுறை வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தொழிற்சங்கங்களை பொறுத்தவரை தொழிலாளர்கள் தங்களது நலன் கருதி வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவர்கள் பொங்கல் நேரத்தில் இப்போராட்டத்தினை முன்னெடுப்பது குறித்து சற்று கருத்தில் கொள்ள வேண்டும்.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச அரசு தயாராக உள்ளது. எனவே பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டு போராட்டத்தினை கைவிட வேண்டும். அரசு சார்பில் நடைபெறும் நிகழ்வுகள் முதலீட்டாளர்கள் மாநாடு, சட்டமன்ற கூட்டத்தொடர், பொங்கல் திருநாள் போன்ற அரசு ஏற்று நடத்தும் நிகழ்வுகளும் அடுத்தடுத்து இருக்கிறது.

எனவே இவை முடிந்த பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேசுவோம். பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து வரும் 8 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.