தமிழ்நாடு

நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு: ஹெச் ராஜா மீதான குற்றப்பத்திரிகை நகல் தாக்கல்

Sinekadhara

நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகை நகல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைத்துப் பேச காவல்துறை அனுமதி மறுத்திருந்ததாக சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போதைய பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்ததாகவும், அதுகுறித்து திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெச். ராஜா மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலை அரசுத்தரப்பு தாக்கல் செய்தது. திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்க உள்ளதாக அரசுத்தரப்பு தெரிவித்தது. ஆனால், ஹெச்.ராஜா காரைக்குடியில் உள்ள நிலையில், அவர் தலைமறைவு என காண்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.