கள்ளக்க்குறிச்சி விஷச்சாராய சம்பவம் pt
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்| பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்!

PT WEB

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம். இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயர்ந்து விடக்கூடாது என்ற அச்சமே நிலவுகிறது. கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.

பேரவையில் முதல்வர் பேச்சு

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், “இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரண நிதியோடு பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்கும்.

  • பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும், பாதுகாலரின் பராமரிப்பில் வளர அவர்களது 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா 5 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்த பின், அந்த வைப்புத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

  • பொற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.

  • பெற்றோரை இழந்த குழந்தைகள் அவர்களின் விருப்பத்தின் பேரில், அரசு, அரசு நிதி உதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்” என தெரிவித்தார்.