தமிழ்நாடு

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதால் இளைஞர்கள் ஆத்திரம்

webteam

விழுப்புரம் அருகே கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக கூறி இளைஞர்கள் சாராய பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் நகர் பகுதியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ப.வில்லியனூர். இங்கு கடந்த 15 வருடங்களாக எந்த தடையும் இல்லாமல் 24 மணிநேரமும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். இந்த கள்ளச்சாராய விற்பனையை தடை செய்ய கோரிக்கை வைத்து பலமுறை வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கள்ளச்சாராய பாக்கெட்டுடன் நேரடியாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. அங்கு 24 மணிநேரமும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதால் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என்றும் அதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.