தமிழ்நாடு

பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது... குடும்ப பெண்களையும் சித்தரித்த கொடூரம்..!

webteam

பெண்களை ஆபாசமாக படமெடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர், தனது குடும்ப பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் சிலரின் அந்தரங்கப் புகைப்படங்களும், வீடியோக்களும் ஃபேஸ்புக்கில் பரப்பப்டுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதுகுறித்த விசாரணையில், பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கயாஸ் முகமது என்பவருக்கு இதில் தொடர்பு உள்ளதாக தெரிய வந்தது. முதுகலைப் பட்டம் படித்த முகமது, ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நண்பர் வீட்டில் வசித்து வந்தார்.

போலீசார் விசாரணையில், ஆபாச படங்களை தான் தொடர்ந்து பார்த்து வந்ததால் பெண்கள் உடல் மீதான மோகத்தில், ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க துவங்கியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. வீதிகளில், பேருந்துகளில், ரயில்களில் பெண்கள் செல்லும்போது ஆபாசமாக படம் எடுத்து, அதனை தவறாக சித்திரித்து தனது அடையாளங்களை காட்டிக்கொள்ளாமல் புதியதாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி அதில் பதிவேற்றம் செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் எந்த புகைப்படம் அல்லது வீடியோ அதிகம் பகிரப்படுகிறதோ அதில் ஆபாசமாக கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண் தோழி ஒருவர், கயாஸ் முகமது ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் கொடுத்ததன் மூலம், முகமது போலீசாரிடம் சிக்கியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தின் ஐ.டிகளை வைத்து தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் கயாஸ் முகமதை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது சிறையில் அடைக்கப்பட்டார். காதல் தோல்வி அல்லது தன்னை ஏமாற்றியவர்களை பழி வாங்க வேண்டும் என்றால் மட்டுமே ஃபேஸ்புக்கில் தவறாக புகைப்படங்களை பதிவிட்டு வந்த நபர்கள் மத்தியில் கைது செய்யப்பட்ட கயாஸ் முகமது தனது குடும்ப உறுப்பினர்களையும் தவறாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.