ராமேஸ்வரம் முகநூல்
தமிழ்நாடு

ராமேஸ்வரம் | மனைவியை கொன்ற கணவன்.. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்!

ராமேஸ்வரத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்தவரை, காவல்துறையினர் முன்பே கிராம மக்கள் தாக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்.

ராமேஸ்வரத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்தவரை, காவல்துறையினர் முன்பே கிராம மக்கள் தாக்கினர்.

ராமேஸ்வரம் அடுத்த ஏரகாடு பகுதியில் காவல்துறையினர், தனலட்சுமி என்பவர் வீட்டிற்கு அவரது கணவர் தர்மராஜூடன் வந்திருந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த வீட்டினை சுற்றி நின்றனர். வீட்டின் அருகே குழி தோண்டிய போது ஒரு உடல் தென்பட்டது.

அப்போது தனலட்சுமியின் உறவினர்களின் அழு குரல் அதிகரித்தது. அப்போதுதான் கிராம மக்களுக்கு தெரிந்தது தனலட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது. உடனடியாக தர்மராஜை சூழ்ந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சரமாரியாக தாக்க தொடங்கினர்.

அவர்களிடம் இருந்து தர்மராஜை காவல்துறையினரும் மீட்டனர். தனலட்சுமியை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விவாகரத்து கோரி பிரிந்து வாழ்ந்த தனலட்சுமியிடம், தர்மராஜ் தகராறில் ஈடுபட்டதும், அப்போது சுத்தியலால் மனைவியை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

தர்மராஜை கைது செய்த காவல்துறையினர், தனலட்சுமியின் உடலை புதைத்த இடத்தை காட்டுவதற்கு அழைத்து வந்த போதுதான் கிராம மக்கள் தாக்கியுள்ளனர். தர்மராஜ் - தனலட்சுமிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இவரும் தாய், தந்தை இன்றி தனித்து விடப்பட்டிருப்பது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.