உயிரிழந்த தம்பதி புதியதலைமுறை
தமிழ்நாடு

தென்காசி: மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரைவிட்ட கணவன்.. சோகத்தில் மூழ்கிய வாரிசுகள்!

PT WEB

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் 3ம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரமகாலிங்கம்(80). இவரது மனைவி ச.சிவஞானம்மாளுக்கு வயது 78. இந்த தம்பதிக்கு 7 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு, சங்கரமகாலிங்கத்துக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிருந்தனர். அப்போது, அவர் ஊருக்கு செல்வோம் என்று தனது மகன் பழனிச்சாமியிடம் கூறிதாக சொல்லப்படுகிறது. மேலும், சிகிச்சையில் இருக்கும்போதே மனைவியைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், மகன் பழனிச்சாமியும் தந்தையை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டுள்ளார்.

இதனிடையே வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சிவஞானம்மாளும் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் உயிரிழந்தார். அவர் இறந்த தகவலைத் தெரிவித்தால் தந்தை சங்கரமகாலிங்கம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவார் என்று நினைத்த பழனிச்சாமி, அம்மா உயிரிழந்த தகவலை மறைத்துள்ளார். இதற்கிடையே தனது மனைவி இறந்த செய்தி அறிந்த சங்கரமகாலிங்கம், வீட்டுக்கு வரும் முன்பே மனைவி இறந்துவிட்டாளே என்று கதறி அழுதுள்ளார். அவரது மகன்கள் செய்வதறியாது திகைத்து பின்னர் சிவஞானம்மாள் உடலை எரியூட்டுவதற்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

உயிரிழந்த தம்பதியின் பழைய புகைப்படம்

இந்நிலையில், மனைவி அருகிலேயே இருந்த சங்கரமகாலிங்கம், துக்கம் தாளாமல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சிடைந்த அவரது மகன்களும், மகள்களும் கதறி அழுதனர். அம்மா அப்பா இருவரது இறுதிச் சடங்குகளையும் செய்ய நினைத்ததை எண்ணி வருந்தியவர்கள், இருவரையும் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வாழ்வில் இணைந்த தம்பதியர், சாவிலும் இணைந்ததை கண்டு கண்ணீர் அவர்களது வாரிசுகள் கண்ணீர் சிந்தியது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.