தமிழ்நாடு

முதல் மனைவிக்காக இஸ்லாம்; இரண்டாம் மனைவிக்காக கிறிஸ்துவம் : துரோகம் இழைத்த கணவர் கைது 

முதல் மனைவிக்காக இஸ்லாம்; இரண்டாம் மனைவிக்காக கிறிஸ்துவம் : துரோகம் இழைத்த கணவர் கைது 

webteam

விதவையை மறுமணம் செய்ய இஸ்லாம் மதத்திற்கு மாறி ஏமாற்றியதோடு, இரண்டாவது பெண்ணை திருமணம் செய்ய கிறிஸ்தவ மதம் தழுவிய பொறியாளரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செய்பகராமன் புதூரை சேர்ந்தவர் தங்க பொன்சன். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு கணினி பொறியாளராக மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த அதே பகுதியில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த விதவை பெண்ணான பாத்திமா என்பவரும் வசித்து வந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து பொன்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி பாத்திமாவை மறுமணம் செய்து கொண்டார். இத்தம்பத்திக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த பொன்சன், அடிக்கடி வரதட்சணை கேட்டு பாத்திமாவை கொடுமை படுத்தியதாக தெரிகிறது. பின்னர் தான் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி பாத்திமாவையும் குழந்தைகளையும் மீண்டும் மும்பைக்கே அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில், தங்க பொன்சன் முஸ்லீம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதம் தழுவி குமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த சகீலா(32) என்ற கிறிஸ்தவ பெண்ணை வீட்டினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த பாத்திமா, கணவர் பொன்சனிடம் முறையிட்டுள்ளார். அப்போது, கணவன் பொன்சன், இரண்டாவது மனைவி சகீலா, கணவனின் தாயார் தமிழ்செல்வி ஆகியோர் சேர்ந்து பாத்திமாவை தாக்கியதாக தெரிகிறது. 

இது தொடர்பாக பாத்திமா நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தங்கபொன்சனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.