'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பான வழக்கு: NIA-க்கு மாற்றம்! puthiya thalaimurai
தமிழ்நாடு

'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பான வழக்கு: NIA-க்கு மாற்றம்!

ஜெ.அன்பரசன்

ராயப்பேட்டையில் 'ஹிஸ்புத் தஹ்ரீர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக UAPA சட்டத்தில் 6 நபர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக NIA வழக்கு பதிவு செய்துள்ளது.

NIA

கடந்த மே மாதம் ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பயங்கரவாத (உபா- UAPA) செயல்கள் தடை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பான 'ஹிஸ்புத் தஹீரிர்' என்ற அமைப்பிற்கு யூட்யூப் பிரச்சாரங்கள் மூலம் கூட்டங்களை நடத்தியும் ஆட்களை சேர்த்ததது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சென்னை காவல்துறை, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தம் சாஹிப் ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மொபைல் ஃபோன்கள், லேப்டாப், சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் மற்றும் ஹிஸ்புத் தஹ்ரீர், கிலாஃபா, இஸ்லாமிய அரசு சித்தாந்தம் அடங்கிய புத்தகங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசாரால் UAPA சட்ட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 6 நபர்கள், சம்பவம் தொடர்பாக NIA வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

NIA அதிகாரிகள் விசாரணையில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட 6 நபர்களும், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹீரிர்' என்ற அமைப்பிற்கு யூட்யூப் பிரச்சாரங்கள் மூலம் கூட்டங்களை நடத்தி ஆட்களை சேர்த்தது தெரியவந்ததாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கானது மத்திய குற்றபிரிவு - சைபர் கிரைமிலிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார், NIA அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அடுத்தக்கட்டமாக என்.ஐ.ஏ-வால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து மீண்டும் சோதனை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் எவ்வளவு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது? யாருக்கெல்லாம் பணம் கைமாறியுள்ளது என்ற விவரங்களை திரட்டும் பணியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 6 நபர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் NIA அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.