இரண்டாம் முறை புதைப்பு முறை புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் | ஜூன், ஜூலைகளில் கூட்டம் கூட்டமாக வட்டமடிக்கும் கழுகுகள்... வரலாற்று பின்னணி இதுதான்!

PT WEB

செய்தியாளர் - பே. சுடலைமணி செல்வன்

உலக நாகரிகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது இந்த ஆதிச்சநல்லூர்.

ஆதிச்சநல்லூர்

இங்கு சுமார் 125 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது, ஒரு பரம்பு. எனவே இதை ஆசியாவிலேயே மிகப்பெரிய இடுகாடு என்றும் அழைக்கிறார்கள். இந்த பரம்பில்தான் 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் இறந்த மனிதனின் உடலை புதைத்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட முதுமக்கள், தாழிகளுக்குள் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். இதனை ‘இரண்டாம் நிலை புதைப்பு முறை’ என்று தொல்லியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் நிலை புதைப்பு முறை என்பது என்ன?

இரண்டாம் நிலை புதைப்பு முறை என்பது இறந்தவர்கள் உடலை முள் வேலிகளில் போட்டு அதை பறவைகள் தின்று விட்டு மீதம் இருக்கும் எலும்புகளை மட்டும் முதுமக்கள் தாழியில் வைத்து புதைப்பதாகும்.

ஆதிச்சநல்லூர்

3,000 ஆண்டுகளுக்கு முன்...

3,000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஜுன், ஜுலை மாதங்களில் அதிக அளவு வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் வெயில் தாங்க முடியாமல் அதிகளவில் மக்கள் இறந்துள்ளார்கள். அந்த சமயங்களில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிக்கு இறந்தவர்கள் உடலை கொண்டு சென்று, அங்குள்ள முள்வேலிகளில் அவற்றை போட்டு விட்டுச் சென்றுள்ளார்கள். அதை கழுகு போன்ற பறவைகள் உண்டு விட்டு எலும்புகள் மட்டும் கிடக்கும். அதற்கு பிறகு அந்த எலும்பை எடுத்து முதுமக்கள் தாழிகளுக்குள் போட்டு அடக்கம் செய்துள்ளார்கள்.

அந்த சமயங்களில் இருந்த பறவைகளில் ஒன்றான கழுகு இனங்கள் 3000 ஆண்டுகள் தாண்டியும் அதே காலங்களான ஜுன் ஜுலை மாதங்களில் இந்த ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன.

ஆதிச்சநல்லூரில் வட்டமடிக்கும் கழுகுகள்

சுமார் ஆயிரக்கணக்கான கழுகுகள் ஆதிச்சநல்லூர் பரம்பை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறது. ஓய்வெடுப்பதற்காக அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள மரங்கள் அமர்ந்திருக்கும் கழுகுகள் தொடர்ந்து இந்த ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் வட்டமிடுவதை அந்த வழியாகச் செல்பவர்கள் ‘என்ன காரணத்திற்கு வட்டமிடுகின்றன?’ என்று தெரியாமலேயே செல்கின்றனர்.

இதுகுறித்து ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி குறித்து 70க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில்,

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு

“ஆதிச்சநல்லூர் ஆசியாவிலேயே மிகப்பெரிய இடுகாடு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் புதைக்கப்பட்ட முறை, இரண்டாம் நிலை பரியல் என்று கூறப்படுகிறது. இங்கு ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் அதிக அளவில் மக்கள் இறந்து போவார்கள்.

ஆதிச்சநல்லூரில் வட்டமடிக்கும் கழுகுகள்

அவர்களை இந்த இரண்டாம் நிலை பரியல் முறையில் அடக்கம் செய்வார்கள். அப்படி செய்யும் போது அந்த முள்வேலியில் உள்ள மனிதர்களின் உடலை உண்பதற்காக வந்த கழுகுகள் தற்போது வரை காலம் காலமாக வந்து சென்றுள்ளது. தற்போது அதே கால நிலை நிலவி வருவதால் இந்த சமயத்தில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆயிரக்கணக்கான கழுகுகள் வானில் வட்டமிட்டு வருகின்றன காட்சிகளை பார்க்க முடிகிறது. இதன் மூலம் பறவைகள் காலம் காலமாக தங்களது வழக்கத்தை மாற்றாமல் இருந்து வருவது உறுதியாகிறது” என்றுள்ளார்.